/

பாஜக வேட்பாளராகும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார்!

பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தயார் பாஜக வேட்பாளராக களமிறங்குவது குறித்து...

News image

ரத்னா தேவ்நாத்

பிடிஐ

Updated On :26 மார்ச் 2026, 2:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நீதி கிடைக்கும் என ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் மருத்துவரின் தாயார் இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக சார்பில் பதிக்கப்பட்ட மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் வேட்பாளராக நிற்கவைக்கப்பட்டுள்ளார்.

2024 ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை பயின்று வந்த 26 வயது பெண் மருத்துவர், செமினார் அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல மாதங்களாக நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் நீதி கிடைக்கவில்லை. தற்போது மாநிலத்தின் ஆட்சி மாற்றம் ஒன்றே நீதி பெறுவதற்கான ஒரே வழி என்ற முடிவுக்கு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

தற்போது, பாதிக்கப்பட்ட மருத்துவரின் தாயார் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட பானிஹாதி தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர்,

''பாஜகவால் மட்டுமே என் மகளுக்கு நீதி பெற்றுத் தர முடியும். மாநிலத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

எங்கள் மகளின் மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். ஆனால், இடதுசாரிகள் வெறுமனே போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

இடதுசாரிகள் முன்பு மாநிலத்தை ஆண்ட விதமும், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்க மறைமுகமாக உதவும் விதமும் நன்கு தெரிகிறது. எங்களுக்கு எதிராகப் போட்டியிடும் அவர்களின் (இடதுசாரி) வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.

திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக கட்டாயம் குடும்பத்துடன் பிரசாரம் செய்வேன்.

இதற்கு முன்பே திரிணமூல், பாஜக உள்பட பல கட்சிகளில் இருந்து போட்டியிடுமாறு கேட்டனர். எனக் குறிப்பிட்டார். ஆனால், அப்போது மனதளவில் நான் தயாராக இல்லை. இப்போது நான் வேட்பாளர் பொறுப்பை ஏற்றிருப்பதற்கு காரணம், மாநிலத்தில் உள்ள தவறான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே.

பாஜகவில் இருந்து போட்டியிட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். நான் வெற்றி பெற்றால், பானிஹாதி மக்கள் வெற்றி பெற்றதைப்போல. போராட மறந்தவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.

மக்களுக்கு நான் சேவை செய்வதால் என் மகள் மகிழ்ச்சி அடைவாள். மாநிலம் முழுவதும் தாமரை மலர வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் வேரோடு தூக்கி எரியப்பட வேண்டும்'' எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.