வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணி தீவிரமடைந்து வரும் நிலையில் தில்லியில் இன்று (ஜன.26) நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது. மேலும் தில்லி செங்கோட்டையைக் கைப்பற்றிய விவசாயிகள் அங்கு விவசாய சங்கக் கொடி ஏற்றப்பட்டது.
போராட்டத்தின் தீவிரத்தை தடுக்கும் விதமாக தில்லியின் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜன.26) நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை தில்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.