கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென்று செயல்படாததை கண்டித்து விவசாயிகள், மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், நம்புரான் பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்காமல் மழையிலும் வெயிலிலும் நெல்மூட்டைகள் வீணாகி வருகின்றது.
இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் சொல்லாததால் வேதனையடைந்த விவசாயிகள் புதன்கிழமை நம் புரான்பட்டி வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்தர்வகோட்டை வட்டாட்சியர் சி. புவியரசன் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை மறியலை கைவிட படி கேட்டுக்கொண்டதன் பேரில் விவசாயிகள் மறியலை கைவிட்டு காத்திருக்கின்றனர்.