பாஜக ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “ பாஜக அனைவருக்குமான நீதியை வழங்கும். தங்கக் கடத்தல் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நீதி விசாரணை மேற்கொள்ள கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பின் கூட்டாச்சி தத்துவத்திற்கு கேரள அரசு சவால் விடுத்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கேரளத்தில் பாஜக ஆட்சியமைத்தால் சபரிமலையின் மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைக் காக்க சட்டம் இயற்றுவோம். மேலும் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றி செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.