

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண் பார்வையை இழந்து உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு(33). அச்சகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் சுமைதூக்கும் தொழிலாளியான செல்வம்(36) மற்றும் வீராசாமி(52), சரத்குமார்(28) உள்ளிட்ட 6 பேரும் சனிக்கிழமை அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சற்றுநேரத்தில், பிரபு, செல்வம் ஆகியோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து, செல்வம் அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, வீராசாமி மற்றும் சரத்குமார் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கள்ளச் சாராயம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி மயிலாடுதுறையில் தலைதூக்கியுள்ள கள்ளச் சாராய விற்பனையை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.