தோற்றுப்போன 'சிஸ்டம்', மோடியின் நண்பர்களுடைய லாபத்துக்காக மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களைத் தோற்கடித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தடுப்பூசி மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது பற்றிக் கடுமையாக விமர்சித்து சுட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார் ராகுல்.
கரோனா தடுப்பூசி மருந்து ஆராய்ச்சிக்காக மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் பணம் தரப்பட்டது.
இப்போது, இந்திய அரசானது அதே மக்களை, இந்த மருந்துகளுக்காக உலகிலேயே மிக அதிக விலையைத் தர வைக்கிறது.
தோற்றுப்போன இந்த முறைமை (சிஸ்டம்) மீண்டும் ஒருமுறை, மோடியின் நண்பர்களுக்காக நம் நாட்டு மக்களைத் தோற்கச் செய்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இதுதொடர்பான சில மேற்கோள் நறுக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் ராகுல்காந்தி.
கோவாக்ஸின் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ. 65 கோடி மானியத்தையும் (மக்கள் பணத்தை) 3 அரசு நிறுவனங்களின் உதவியையும் மத்திய அரசு வழங்கியது.
ஆனால், அரசு உதவி பற்றி கண்டுகொள்ளாமல் விலை பற்றிக் குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கும் கூடுதலாக ரூ. 150 விலையில் மத்திய அரசுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் நிறுவனத்தின் பிற தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
தனியாருடைய லாபத்துக்காக அரசுத் தொழில்நுட்பம் இலவசமாக அளிக்கப்பட்டதா என்ற பொருளியல் வல்லுநரின் கேள்வியையும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
பாரத் பயோடெக்கிற்கு அளிக்கப்பட்ட மக்கள் பணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்ஸின், யாருடைய அறிவுசார் உரிமை? இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது என்றொரு கேள்வியையும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.