வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும்: பழனிவேல் தியாகராஜன்
சென்னை: அரசின் வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வீடுகள் கட்டித்தரப்படும்.
* வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும்.
* கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
* 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
* 2024 மார்ச்சுக்குள் 83.92 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
* ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.