மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா தமிழக அரசியலின் மூத்த தலைவராவார். 100 வயதை எட்டியுள்ள சங்கரய்யா சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் என்.சங்கரய்யாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு நாள்களாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சங்கரய்யாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கேரளத்தில் முழு ஊரடங்கா? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
சங்கரய்யாவை கவனித்துக் கொள்ள தனி மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.