பார்வை மாற்றுத்திறனாளி, அரசியல் கட்சி ஒன்றில் மாவட்டச் செயலாளராகி தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளார்.
அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் என்பவை நீண்ட காலங்களாகவே ஆண்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சமூகத்தின் பல தரப்பினரும் எந்தவொரு அரசியல் கட்சியிலும் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவது அத்தி பூத்தாற் போலவே நடந்துள்ளது.
இதையும் படிக்க | பாஜகவிலிருந்து விலகிய அமைச்சரை நெருங்கும் சிக்கல்
இந்நிலையில் அரசியல் கட்சி ஒன்றிற்கு 100 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்டச் செயலாளராகி கவனம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு செங்கல்பட்டு மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. இதில் பார்வை மாற்றுத்திறனாளியான பாரதி அண்ணா மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அரசியலில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இளம்பருவத்திலிருந்தே பார்வை சிக்கலில் இருந்த பாரதி அண்ணா தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொண்டு செயல்பட்டு வருகிறார்.
இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்டவற்றில் செயல்பட்டுள்ள பாரதி அண்ணாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.