திருவாரூர்: திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி குடிசை வீட்டுக்குள் புகுந்ததில் வீட்டிலிருந்த 3 பேர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு பெரம்பலூரிலிருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, மணலை இறக்கிவிட்டு திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் நோக்கி இன்று (வியாழக்கிழமை) மாலை வந்து கொண்டிருந்தது. லாரியை பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் பகுதியில் வரும்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த புலிவலம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன்(22) என்பவர் மீது உரசி, அருகிலிருந்த குடிசை வீட்டுக்குள் சுவரை இடித்துக் கொண்டு நுழைந்தது.
சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டிலிருந்த ராஜா, அவரது மனைவி மீனா, அவரது மைத்துனர் நேதாஜி ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்த ராஜ்குமாரும் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.