சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள்.
சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள்.

சிவகங்கையில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன திருவிழா!

சிவகங்கையில் காளி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Published on

சிவகங்கை: சிவகங்கையில் காளி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஆக.22) கோயில் திருவிழா பெருமாள்சாமி பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்வு சனிக்கிழமை அதிகாலை தொடங்கியது.

காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்து அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் பலியிடப்படுகின்றன. எருமை பலியிடும்போது வெளியேறும் ரத்தத்தை பக்தர்கள் குடித்து வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிப்பதற்காக காத்திருக்கும் பக்தர்கள்.
சிவகங்கை பழமலை நகர் காளி, மதுரைவீரன் கோயிலில் நடைபெற்ற எருமை பலியிட்டு வழிபடும் நிகழ்வில் மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிப்பதற்காக காத்திருக்கும் பக்தர்கள்.

காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வழிபடுபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். இந்த நிகழ்வில் 17 எருமை மாடுகளும், 92 ஆடுகளும் பலியிடப்பட்டன.

இந்த விழா கடந்த 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தலைக்கட்டுக்கும்(ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகின்றனர். அதன் மாமிசத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் தற்போது எந்த ஊரில் வசிக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்தனுப்புகின்றனர்.

இந்த விழா அனைவராலும் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் சில ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், சில ஆண்டுகள் இடைவெளி விட்டும் நடத்தப்படுகிறது.

காளி அசுரனை(எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும் அதனால் அதை தரை சிந்தவிடாமல் குடித்து விடுவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை மது எடுப்புடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com