விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: ‘ஃபென்ஜால்’ புயல் மாமல்லபரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் தெற்கு இலங்கையையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.

இந்தப் புயல் மாமல்லபரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், கரையைக் கடக்க 6 மணிநேரத்திற்கு மேலாக எடுத்துக்கொண்டது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி - சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் சாலையின் மையப் பகுதியில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதை உடனடியாக நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அகற்றினா்.

விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா் போன்ற புறநகா்ப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது. தொடா்ந்து மழை பெய்ததால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

புயலால் மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளதால், சுமாா் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்து மின் கம்பிகளும் அறுந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழைக்கு மத்தியில் அனைத்து துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் சி.பழனி ஞாயிற்றுக்கிழமை மாலை இரவு அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com