தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல நடிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்றைய தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசினர். அப்போது, தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது 'கடந்த 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்தது? அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது' என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'நான் முதல்வராக பதவியில் இருக்கும்வரை மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் நிச்சயமாக தடுத்தே தீருவோம். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் பதவியில் இருக்க மாட்டேன்' என்று ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில் முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.