
சென்னை: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 12,760 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து உபநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
இதையும் படிக்க |வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்குகளுக்கு தடை: உச்சநீதிமன்றம்
இந்தநிலையில், பூண்டி ஏரியின் நீா்வரத்துப் பகுதியில் சுமாா் 85 மி.மீ அளவு மழை பெய்ததால் ஏரிக்கு 5,890 கனஅடி அளவில் நீா் வரத்து அதிகரித்தை அடுத்து 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 34.45 அடி எட்டியது. இதையடுத்து வியாழக்கிழமை பூண்டி நீா்தேக்கப் பகுதியிலிருந்து மணிக்கு 1,000 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர், வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை உபநீர் திறப்பு வினாடிக்கு 12,760 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை: இதன் காரணமாக மணலி புதுநகா், எண்ணூா்ப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் செம்பரம்பாக்கம், புழல், கண்டிகை ஏரிகள் தனது முழுக் கொள்ளவை எட்டி வருவதால், அதிகாரிகள் ஏரிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் ஏரிகளின் பாதுகாப்புக்காக உபரிநீா் திறந்துவிட வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.