புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தில்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.09 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் அழைப்பு வந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு கண்டறியும் குழு மூலம் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
வெள்ளிக்கிழமை சுமார் 30 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை பின்னடைவு
இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலமாக பள்ளிகளில் சோதனை நடைபெற்றது.
அதற்கு முன், கடந்த திங்கள்கிழமை (டிச.9) ஒரேநாளில் 44 பள்ளிகளுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்காததால் அந்த மிரட்டல்களை புரளி என போலீசார் அறிவித்தனர்.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது யார் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.