தாயகம் திரும்பியுள்ள மேரி ஜேன் வெலோஸோ
தாயகம் திரும்பியுள்ள மேரி ஜேன் வெலோஸோDinamani

15 வருட மரண தண்டனைக் கைதி நாடு திரும்பினார்!

இந்தோனேசியா சிறையில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக மரண தண்டனைக் கைதியாக இருந்த பெண் நாடு திரும்பியதைப் பற்றி..
Published on

இந்தோனேசியா சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருந்த பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 14 வருடங்கள் கழித்து சொந்த நாட்டிற்கு திரும்பினார்.

பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணான மேரி ஜேன் வெலோஸோ கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தோனேசியா நாட்டிற்குள் ஹெராயின் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார்.

வீட்டுவேலை செய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் இந்தோனேசிய வந்துள்ளார். அப்போது அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்த அவரது உறவினரின் ஆண் நண்பர்கள் கொடுத்த புதிய துணிகள் மற்றும் புதிய பை ஆகியவற்றை அவர் பிலிப்பின்ஸில் இருந்து எடுத்து வந்துள்ளார்.

மேரிக்கு தெரியாமல் அதனுள் அவர்கள் ஹெராயினை மறைத்து வைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தோனேசியாவின் யோக்யாகர்டா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

14 வருடங்கள் கழித்து நாடுத்திரும்பிய மேரியை ஆரத் தழுவிக்கொள்ளும் அவரது உறவினர்கள்
14 வருடங்கள் கழித்து நாடுத்திரும்பிய மேரியை ஆரத் தழுவிக்கொள்ளும் அவரது உறவினர்கள்Dinamani

இரண்டு குழந்தைகளுக்கு தாயான 39 வயதான மேரிக்கு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கி படையினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த வேளையில் அவரை இந்தோனேசியாக்கு வேலைக்கு அழைத்த பெண் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்போது இந்தோனேசியாவின் அதிபராக இருந்த மூன்றாம் பெனிக்னோ அகுயினோவால் அவரது மரண தண்டனைக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், மேரி அந்த ஆள்கடத்தல் வழக்கில் சாட்சியாகவும் சேர்க்கப்பட்டார்.

இதனால், மரண தண்டனை இல்லாத பிலிப்பின்ஸ் நாட்டில் மேரிக்கான ஆதரவு அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது இருநாட்டு அரசுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேசியாவிலிருந்து மேரி தனது சொந்த நாடான பிலிப்பின்ஸிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (டிச.18) மேரி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார்.

அந்த ஒப்பந்தத்தில் மேரி குற்றவாளியாகவே அவரது நாட்டிற்கு திரும்புவார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதினால். தற்போது அவர் மனிலாவிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினாண்டு மார்கோஸ் அவருக்கு விடுதலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேரியின் விடுதலைக்கு சில தினங்களுக்கு முன்னதாகத்தான் போதைப் பொருள் கடத்திய வழக்கில் இந்தோனேசியா சிறையில் 20 ஆண்டுகளைக் கழித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5 பேர் நாடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com