சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸை பூமிக்குத் திரும்ப அழைத்துவரும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்றுள்ள பட்ச் வில்மோருக்கு பதிலாக மாற்று விஞ்ஞானிகளை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவா்கள் இருவரையும் பூமிக்குத் திரும்ப அழைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் .
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது.
இந்த நிலையில், அவா்களை பூமிக்கு அழைத்துவரும் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.