ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி!

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு ஒப்புதல்.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2024, 7:24 pm IST

மலேசியா: பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் மாயமானது.

இறுதியில் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உடைந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல்வேறு அமைப்புகள், அரசுகள் அதனை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டு தோல்வியைத் தழுவின.

பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் அது எங்கே? என்ற மர்மம் முடிவுக்கு வராத நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ’ஒஷன் இன்ஃபிண்ட்டி’ எனும் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதனை மீண்டும் தேட முன்வந்ததற்கு மலேசிய அரசு ஒப்புதலளித்துள்ளது.

இதுகுறித்து இன்று (டிச.20) மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லூக் கூறுகையில், மாயமான விமானத்தைத் தேட அந்நிறுவனத்துடன் 70 மில்லியன் டாலர் மதீப்பீட்டில் ’நோ ஃபைண்ட், நோ ஃபீஸ்’ ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனம் மறைந்த விமானத்தின் பாகங்கள் ஏதேனும் கண்டுப்பிடித்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில கோட்பாடுகள் குறித்து இருத்தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் இந்த தேடுதல் பணி அடுத்தாண்டு (2025) உறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, 'ஒஷன் இன்ஃபிண்ட்டி’ நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்த விமானத்தின் பாகங்களை மூன்று மாதங்கள் தேடி தோல்வியுற்றது.

மேலும், சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சுமார் 150 மில்லியன் டாலர் செலவில் 2 ஆண்டுகளாக நடத்திய தேடலும் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் முடிவுப்பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.