
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 81) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) தெரிவித்துள்ளது.
மேலும், அதிபர் பைடன் கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்கள் போட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான அறிகுறி தெரிந்ததால் கரோனா பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிபர் தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும், இருப்பினும், அனைத்து அலுவலக பணிகளையும் அவர் மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் பைடனின் உடல்நிலைக் குறித்து அவரின் மருத்துவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“அதிபர் பைடனுக்கு இன்று பிற்பகல் லேசான சுவாச பிரச்னையும், சலி மற்றும் பிரச்னையும் இருந்தது. காலை கலந்து கொண்ட நிகழ்வில் நன்றாக இருந்த நிலையில், தொடர்ந்து சோர்வுடன் இருந்ததால், கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ரெஹோபோத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சுவாச பிரச்னை, காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் பைடன் பங்கேற்கவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 2022 இல் அதிபர் பைடனுக்கு முதல்முறையாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. செப்டம்பர் 2023 இல் பூஸ்டர் தடுப்பூசியை பைடன் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.