
சென்னையில் இன்றிரவு(ஜூன் 19) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடனும் இடி, மின்னலுடனும் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சோழிங்கநல்லூரில் 120 மிமீ, பூந்தமல்லியில் 110 மிமீ மழை பதிவானது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
எழும்பூா், சென்ட்ரல், புரசைவாக்கம், செங்குன்றம், அண்ணா நகர், கோயம்பேடு , பாடி, அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், முகப்பேர் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பதிவில், மீனாம்பாக்கத்தில் 241.4 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 189.8 மி.மீ மழையும் பதிவானதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கமாக ஜூன் மாதத்தில் 55 மி.மீ முதல் 60 மி.மீ வரை மழை பெய்யும். ஆனால், இந்த மாதம் முடிய 10 நாள்கள் உள்ள நிலையில், வழக்கத்தைவிட இந்த வருடம் 4-5 மடங்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
இந்த மாதம் சென்னைக்கு மழை பொழியும் மாதமாக உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றிரவும் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.