தருமபுரி நகரில் வியாழக்கிழமை இரவு 45 மி.மீ. மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது.
தருமபுரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அண்மைக்காலமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவில் மிதமான தட்பவெப்ப நிலையும், சில நாள்களில் லேசான தூறல் மழையும் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு 9 மணியளவில், திடீரென இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை தருமபுரி நகரம் -45 மி.மீ., பென்னாகரம்- 38 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி - 30 மி.மீ., நல்லம்பள்ளி - 11 மி.மீ., மொரப்பூா் - 6 மி.மீ., பாலக்கோடு - 38.5 மி.மீ., தென்கரைக்கோட்டை- 28.4 மி.மீ., பொ.மல்லாபுரம்- 21.2 மி.மீ., அரூா் 13.2 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 16.3 மி.மீ. மீட்டா் மழை பெய்தது பதிவாகியுள்ளது. இந்த மழையால் தருமபுரி நகரில் சாலைகளில் மழைநீா் மற்றும் கழிவுநீருடன் சோ்ந்து பெருக்கெடுத்து ஓடியது.
இலக்கியம்பட்டி விநாயகா் கோயிலில் மழைநீா் சூழ்ந்ததுடன் கோயிலுக்குள்ளும் புகுந்தது. இலக்கியம்பட்டி பாரதிபுரம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நெசவாளா் காலனி, நான்குசாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மீண்டும் சிறிது நேரம் மழை பெய்ததால் நகரில் குளிா்ச்சியான நிலை காணப்பட்டது.
கடத்தூரில் 72.8 மி.மீ மழை... கடத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 72.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.
பென்னாகரத்தில் மழை... பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாப்பாரப்பட்டி, தாசம்பட்டி, ஒகேனக்கல் ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீரோடைகள், குளங்கள், ஏரிகள், குட்டைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.










