எல்லா தேர்தலிலும் திமுக வெற்றிபெறும்: முதல்வர் ஸ்டாலின்

’தமிழக வளர்ச்சியை கண்டு பொறாமையுடன் பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள்’
எல்லா தேர்தலிலும் திமுக வெற்றிபெறும்: முதல்வர் ஸ்டாலின்
DOTCOM

இனிவரும் எல்லா தேர்தல்களிலும் திமுகதான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ. 1,273 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை புதன்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மனநிறைவோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். எந்த தேர்தல் வந்தாலும் திமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகி, பொருளாதாரம் உயர்கிறது. இதனை கண்டு சிலர் பொறாமை அடைந்து பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார். எந்த திட்டத்துக்கு மாநில அரசு முட்டுக்கொட்டையாக இருந்தது. தேர்தலுக்கு முன்னதாக பொய் சொன்னால் ஏமாற நாங்கள் ஏமாளிகளா?” எனத் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டங்களுக்கு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

  • தென்னை வேர்வாடல் நோய் அதிகமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற ரூ. 14.04 கோடி நிதி ஒதுக்கீடு

  • 3 லட்சம் தென்னங்கன்றுகள் ரூ. 2.80 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

  • கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும்.

  • விளாமரத்தூர் முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ. நீளத்தில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும்.

  • கோவை வார்டு எண் 11, பழங்குடியினர் வசிக்கக்கூடிய பகுதிகளில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்படும்.

  • மதுக்கரை ஊராட்சி வாளையாறு வனப்பகுதியில் குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.

  • காரமடை, ஆணைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.39 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்படும்.

  • மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 4 பாலங்கள் கட்டப்படும்.

  • 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலைக் கடைகள், 14 சமுதாயக் கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் வடிகால், கான்கிரீட் சாலை ரூ. 10 கோடியில் அமைக்கப்படும்.

  • உக்கடம் பேருந்து நிலையம் ரூ. 20 கோடி மதிப்பில் நவீன முறையில் சீரமைக்கப்படும்.

  • ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீல் விளையாட்டு தளம் அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com