சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார். ஆனால், சமையல் கலைஞர் தாமு இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் புதிய நடுவராக பங்கேற்கிறார்.
இதனிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதால், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ப்ரொடக்ஷென் நிறுவனம் 5-வது சீசனை தயாரிக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் முன்னதாக ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, ராஜு வீட்ல பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ப்ரொடக்ஷென் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ன் புதிய முன்னோட்டக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் மெஹந்தி சர்கஸ், பென்குவின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.