
விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், கூடுதலாக பணம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திங்கள்கிழமை(மே 20) இரவு துணைக் கண்காணிப்பாளர் சத்திய ராஜ் தலைமையிலான போலீஸார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.
சார்பதிவாளர் அலுவலக அறையின் கதவுகள் பூட்டப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் எண்ணிக்கை மற்றும் அதற்குரிய கட்டணம் குறித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சார்பதிவகத்தில் கணக்கில் வராத வகையில் ரூ.1.80 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், பணியிலிருந்த சார்பதிவாளர் லோகநாயகி உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நள்ளிரவு வரை சோதனை நடத்திய போலீஸார், ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து சார்பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சார்பதிவாளர் வீட்டில் சோதனை: இந்த நிலையில், கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடி அருகிலுள்ள வடகுத்து சக்திநகர் பகுதியிலுள்ள சார்பதிவாளர் தையல்நாயகி வீட்டில் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.