திமுக கொடிக்கம்பம் ஊன்றும் போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

தஞ்சாவூரில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்.
திமுக கொடிக்கம்பம் ஊன்றும் போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி
Published on
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியானார்.

தஞ்சாவூரில் நவம்பா் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழா, மக்களவை தொகுதி அலுவலகத் திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். உதயநிதி துணை முதல்வராகி தஞ்சாவூருக்கு வருவது முதல் முறை என்பதால், அவரை வரவேற்கும் விதமாக பதாகைகள் அமைப்பது, கட்சிக் கொடிகள் ஊன்றுவது என திமுகவினா் தயாராகி வருகின்றனா்.

அந்த வகையில், தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் பகுதியில் திமுக கட்சி கொடி ஊன்றும் பணிகள் நடந்து வந்தது. இதில் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (38) என்ற கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக கட்சி கொடி நடும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, அங்கிருந்த மின்கம்பம் அருகில் இரும்புக் குழாயில் திமுக கட்சிக் கொடியைக் கட்டி, நடுவதற்கு முயன்றபோது கொடிக் கம்பம் மின்சார கம்பியில் உரசியதால் நாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக தொழிலாளா்கள் நாகராஜனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு நாகராஜனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடிக்கம்பங்களை திமுகவினர் அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com