
வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு இன்று (நவம்பா் 13) இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது.
வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, காராப்புழா அணை அருகேயுள்ள ஈா்ப்புவிசை மூலமாக கம்பிவடத்தில் இயக்கப்படும் மிகவும் நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ளப் பதிவில், "வயநாட்டில் பிரியங்காவுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள உள்ளூர் மக்களை சந்தித்தேன். சமீபத்தில் அவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து இருந்தாலும், தற்போது அவர்கள் மீண்டெழுந்துள்ளனர்.
வயநாடு எப்போது பாதுகாப்பானது மற்றும் பிரமிப்பானது என்பதை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்ட, தென்னிந்தியாவின் மிகவும் நீளமான மற்றும் உயரமான ஜிப் லைனில் பயணம் செய்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஜிப்லைனில் பயணம் செய்த ஒவ்வொரு நிமிடமும் அனுபவம் செய்தேன்.
வயநாட்டில் எவ்வித பிரச்னையும் இல்லை, நிலச்சரிவு என்பது உள்ளூரில் நடந்த நிகழ்வு, அதனால் சுற்றுலாத்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி ஜிப்லைனில் பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.