
வாழப்பாடி: வாழப்பாடி அருகே செல்போனில் விடியோ கேம் விளையாடிக் கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற இரு மாணவா்கள், ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதிய விபத்தில் பலியாகினர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புத்தரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை செல்போனில் விடியோ கேம் விளையாடிக் கொண்டே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியதில் மாணவர்கள் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் புத்திரகவுண்டன்பாளையம் தேவேந்திரநகரைச் சோ்ந்த குமார் மகன் தினேஷ்(16) சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க | ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை! ஆனால்..?
அதே ஊர் ஆதிதிராவிடா் தெருவை சோ்ந்த ரவிக்குமாா் மகன் அரவிந்த்(16) பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.
விபத்துக்குள்ளான இருவரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் ரத்தினக்குமாா், உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செல்போனில் விடியோ கேம் விளையாடிக் கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற இரு மாணவா்கள், ரயில் மோதி பலியான சம்பவம், இவா்களது உறவினா்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவா்கள் மற்றும் கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.