
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு, பின்னர் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப் படுத்தும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அடித்து சித்ரவதை செய்ததுடன், படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.
பின்னர் தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலால் படகு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்ததாக இதுவரை மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை அதிபராக அநுரகுமார திஸ்ஸநாயக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மீனவர்களை அச்சுறுத்தும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.