
ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வயதான ஆட்டநாயகன்! தோனி படைத்த சாதனைகள்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும். ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டஃபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றதை உண்மையில் சிறந்த கௌரவமாக கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் சிறப்பானது.
இந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்திய அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி. அணியில் உள்ள சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய அணியின் ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: தோனியின் புதியதொரு மைல்கல் சாதனை: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் வென்றிருந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான விருதினை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.