
அகமதாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் குஜராத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் கலாதியா, பாவ்நகரைச் சேர்ந்த யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித் ஆகியோர் அடங்குவர்.
இந்த நிலையில், மும்பையில் இருந்து ஒரு விமானத்தில் யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித்தின் உடல்கள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்திலிருந்து, பர்மர் மற்றும் அவரது மகனின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாவ்நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
யதீஷ் மற்றும் ஸ்மித் பர்மரின் இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பூபேந்திர படேல் பாவ்நகருக்கு புறப்பட்டுள்ளார்.
இதர சுற்றுலாப் பயணிகளும் ஸ்ரீநகரிலிருந்து அதே விமானத்தில் மும்பைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சொகுசு பேருந்து மூலம் பாவ்நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று பாவ்நகர் ஆட்சியர் மணீஷ் குமார் பன்சால் கூறினார்.
மேலும், புதன்கிழமை இரவு மற்றொரு விமானத்தில் கலாதியாவின் உடல் சூரத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் இருந்து தப்பிய கலாதியாவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே விமானத்தில் சூரத் வந்தடைந்தனர்.
சூரத் விமான நிலையத்தில், கலாதியாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.