
சென்னை: தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மணல் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயா்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிா்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் துறைசாா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கடந்த 25-ஆம் தேதி கல்குவாரி, கிரஷா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னா் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, எம்-சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு உயா்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன்னுக்கு ரூ.33 என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.
இந்த கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே. பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் எ. சரவணவேல்ராஜ், கல்குவாரி, கிரஷா் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.சின்னசாமி, சங்க உறுப்பினா்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநா்கள் மற்றும் துணை இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.