ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ.

News image

உலக புராதன சின்னமான செஞ்சி கோட்டை

Updated On :12 ஜூலை 2025, 3:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ. இந்தியாவில் மராட்டியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும்.

இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 27-இல் கோட்டையை ஆய்வு செய்துவிட்டு சென்றார் யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ்.

'மராட்டியத்தின் புகழ் பரப்பிய சத்ரபதி சிவாஜியை பல கோணங்களில் முன்னிலைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகளை மகாராஷ்டிரம் அரசு எடுத்து வந்தது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரம், மத்திய அரசுகளின் பரிந்துரையையேற்று யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் செஞ்சி கோட்டையைக் காண வந்திருந்தார்.

செஞ்சி கோட்டையில் இடம் பெற்றிருக்கும் ராஜகிரி கோட்டையின் கீழ், மேல் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அவரிடம் ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டைகளுக்கு இடையே ரோப் கார் வசதி ஏற்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என, யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகளும், செஞ்சி கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெறலாம். இதற்கான அறிவிப்பு இன்னும் 9 மாத காலத்துக்குள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது யுனஸ்கோ. இந்தியாவில் மராட்டியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.

செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கோட்டையைப் பராமரிக்க பாதுகாக்க மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும். மகாராஷ்டிரம் அரசும் நிதி ஒதுக்கும். செஞ்சி கோட்டை சுறுசுறுப்பான சுற்றுலாத் தலமாக மாறும்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும்.

இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.

செஞ்சி கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம் போன்றவை உண்டு. கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் கல்யாண மண்டபம்தான் முக்கிய கவன ஈர்ப்பு மையம்.

அந்தக் கால சென்னை- பெங்களூரு வணிகத்தை கண்காணித்து ஒழுங்குப்படுத்த பொருத்தமான இடத்தில் செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. சுமார் 1,200 ஏக்கரில் மூன்று சிறு மலைகளை உள்ளடக்கி சுற்றிலும் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களாலும், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், உயரமான மதில்களுடன் செஞ்சி கோட்டை கட்டப்பட்டுள்ளது.

செஞ்சி கோட்டை மராட்டிய சிவாஜிக்கு முன்பும் பின்னும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளதற்கு காரணம் தென் இந்திய மலைக் கோட்டைகளில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை இரண்டும் இணைந்த கோட்டையாக செஞ்சி கோட்டை அமைந்திருப்பதுதான். கோட்டையை யார் கட்டினர் என்றதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.

செஞ்சி கோட்டையை பல்வேறு காலகட்டங்களில் குறும்பர்கள், ஹோய்சலர்கள், விஜயநகர மன்னர்கள் ஆண்டுள்ளனர். தொடர்ந்து நாயக்க மன்னர்கள், முகலாயர்கள் கட்டுப்பாட்டிற்குள் செஞ்சி கோட்டை வந்தது.

மராட்டிய சிவாஜி 1678-இல் செஞ்சி கோட்டையை தன் வசப்படுத்தி கோட்டையை பலப்படுத்தினார். கோட்டையின் பாதுகாப்புச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டையைச் சுற்றிலும் பிரம்மாண்டமான அகழி ஏற்படுத்தப்பட்டது.

ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கேற்ப, ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில் செஞ்சி கோட்டை கட்டுமானங்கள் இருந்தன. இதனால், செஞ்சி கோட்டையை அசைக்க முடியாத கோட்டையாக மாற்றுவதில் சிவாஜியின் போர் அறிவு பயன்பட்டுள்ளது.

மராட்டிய ஆட்சி முழுமையாக செஞ்சி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுச்சேரி, கூனிமேடு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் சிவாஜியின் வசம் வந்தன. சிவாஜிக்குப் பிறகு சிவாஜியின் இரண்டாம் மகன் ராஜாராம் செஞ்சியை ஆண்டார்.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலூன்ற கடலூர், தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் செஞ்சி அரசர் ராஜாராமும், கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ஆளுநர் எலிகு யேலும் 1690-இல் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு அரசின் சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றவும், நாணயங்கள் அச்சிட்டுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டன.

1698-இல் மொகலாயர்கள் செஞ்சி கோட்டையை மீட்டனர். மொகலாயர்களின் பிரதிநிதியாக ஸ்வரூப் சிங் 1698-இல் செஞ்சி கோட்டையை ஆண்டார். இவர் இறந்ததும் அவர் மகன் ராஜா தேசிங் மொகலாயர்களுக்குக் கட்டுப்படாமல், ஆட்சி செய்ய மொகலாயர்கள் நடத்திய யுத்தத்தில் ராஜா தேசிங் கொல்லப்படுகிறார்.

மொகலாயர்களுக்குப் பிறகு செஞ்சி கோட்டை பிரெஞ்சு ராணுவம், ஆங்கில ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்கு சென்னையை தலைநகராக்கியதால், செஞ்சி கோட்டை தனது முக்கியத்துவத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.

Summary

The inscription took place during 47th session of the World Heritage Committee in Paris, France, marking a significant milestone in the global acknowledgment of India’s rich and diverse cultural heritage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.