
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு சிபிசிஐடி அதிகாரிகள் இன்று(புதன்கிழமை) சம்மன் வழங்கினர்.
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜ், முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் வருகிற மார்ச் 11 ஆம் தேதி புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.
இதனிடையே வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மூன்று பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததை சுட்டிக்காட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள மூன்று பேரையும் மார்ச் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் இன்று வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று சம்மன் வழங்கினர்.
அவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. சம்மன் அனுப்பியபடி, மூன்று பேரும் மார்ச் 11 ஆம் தேதி ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.