
மதுரை: மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா் காளை முட்டியதில் பலியானார்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
இதன்படி, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு தொடங்கியது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கொடி அசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண விரும்பும் மக்களின் வசதிக்காக மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கீழக்கரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் கச்சிராயிருப்பைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்பாண்டி(21) மாடுபிடி வீரர் காளை, மாா்பில் முட்டியதில் படுத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதில் தொடர்ந்து ரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது மாடு முட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.