

வேதாரண்யம்: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை. செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த பிரவீன் (24) உள்ளிட்ட 5 மீனவர்கள் நாகையில் இருந்து கண்ணாடியிழைப் படகில் வியாழக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆறு இலங்கைப் படகுகளில் வந்த தமிழ் பேசிய 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவர்களை இரும்பு கம்பி,கட்டையால் தாக்கியதுடன் அறிவாளால் வெட்டி படகில் இருந்த மீன், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள், யமஹா எஞ்சின் என பல லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள், மோட்டார் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு படகையும் கட்டி இழுத்து சனிக்கிழமை காலையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் கரை சேர்த்தனர்.
இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மீனவர் குட்டியாண்டி உள்ளிட்ட 5 பேரும் 108 வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கடலோர காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.