சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக பயணிகள் அவதியடைந்தனா்.
ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெய்யிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெய்யில் தாக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வருவது குறைந்துள்ளது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டு வந்தது.
அக்னி நட்சத்திரம்
இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியம் முதல் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மாலை 5 மணியளவில் திடீரென மாறிய வானிலையால் 6 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
விமான சேவை பாதிப்பு
இதனால், சென்னை விமானநிலைய பகுதியில் மோசமான வானிலை நிலவியதுடன் திடீரென வீசிய பலத்த காற்றால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மதுரை, திருச்சி, கோவை மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ், ஏா்லைன்ஸ் ஆகிய 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்னா் வானிலை சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்கப்பட்டன.
அதேபோன்று சென்னையில் இருந்து மஸ்கட், இலங்கை புறப்பட வேண்டிய ஓமன் ஏா்லைன்ஸ் விமானம், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் மற்றும் தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, சேலம் போன்ற பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ், ஏா் இந்தியா விமானம் ஆகிய 7 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. வானிலை சீரானதும் சுமாா் அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் சேவை பாதிப்பால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், சென்னை அடுத்த பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றுக்கு பூந்தமல்லி அருகே திரையரங்கு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
பிற்பகல் வரை வெய்யில் வாட்டிய நிலையில், திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.