/

அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை; சமூக நீதி பற்றி பேச என்னைத்தவிர வேறு ஆள் இல்லை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.

News image
ராமதாஸ், அன்புமணி- IANS
Updated On :21 மே 2025, 10:04 am

DIN

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவுக்குப் பின்னர், 'பாமகவின் தலைவர் நானே' என ராமதாஸ் கூறினார். பின்னர் கட்சியில் சலசலப்பு ஏற்படவே தானே தலைவராகத் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் கடந்த மே 15, 16 தேதிகளில் நடைபெற்ற பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. இதனால் பாமக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி இடையே இடையே சுமூக நிலை உருவாகிவிட்டதாகவும் விரைவில் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கூறியிருந்தார்.

தொடர்ந்து கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. நான் இனிப்பான செய்திகளைத்தான் சொல்லியிருக்கிறேன். கசப்பான செய்தியைச் சொன்னதில்லை.

வரும் நாள்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணி கலந்துகொள்வார். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பிவிடுகின்றனர். அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?" என்று பேசினார்.

மேலும், 'சமூக நீதியைப் பற்றி பேச வேண்டுமென்றால் இந்திய அளவில் என்னைவிட்டால் வேறு ஆளே கிடையாது. நான் மட்டும்தான் அதைப் பற்றி பேச முடியும். மற்றவர்கள் பேச முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தெரியாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.