இப்போ எல்லாம் எங்கங்க தனியா பேச முடிகிறது... ஆளே இல்லாத இடத்துக்குப் போனாலும் கையில ஒரு போன் இருக்கிறது. அது மூலமாக உலகத்தில் இருக்கிற யாருடனும் பேசலாம். போதுமான பேலன்ஸ் இருந்தால் போதும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
எனினும், நம்முடன் நாம் மனம்விட்டு பேசுவது அவசியம் என்கிறார்கள் மன நல ஆலோசகர்கள். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தற்போதைய உலகம், நமக்கு நாமே பேசிக் கொள்வதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கவலைப்படுகிறார்கள்.
நமது உயிர்ப்புத்தன்மை, ஆழ்ந்த மனநிலைக்கு நமக்கு நாமே பேசிக் கொள்வது மிகவும் முக்கியமான விஷயமாக அமைகிறது.
எந்த ஒரு விஷயத்தையும் நாம் சுயநினைவுடன் அணுகுவோம். அது உண்மைதான். ஆனால், நம் மனம் எங்கோ ஓடிக் கொண்டிருக்க நமது கைகளோ அல்லது கால்களோ அதன் வேலையை செய்து கொண்டிருப்பது, அதுவும் சரியாக செய்து கொண்டிருப்பது எப்படி என்று நாம் சிந்தித்திருக்கோறோமா? சிந்தித்திருப்போம் ஆனால் அதற்கு பதில் நமது ஆழ்மனதுதான். அது எந்த ஒரு வேலையையும் தெளிவாக நினைவுபடுத்தி, நமது சுய நினைவு வெளியே ஊர் சுற்றச் சென்றாலும், நம்மை சீராக இயக்குகிறது.
அப்படியிருக்க, அந்த ஆழ் மனதை உதாசினப்படுத்தவது, பெற்ற தாய் -தந்தையை உதாசீனப்படுத்துவது போலத்தான்.
மேலும், ஒரு தவறை செய்யும் போது, உங்களை விட, உங்கள் ஆழ் மனம்தான் அதிகம் வேதனைப்படும். அது போலவே ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது, உங்களை விட உங்கள் ஆழ் மனம் அதிகம் சந்தோஷப்படும்.
சந்தோஷமோ.. துக்கமோ அதை ஆழ் மனது உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், உங்களது சுய நினைவில் நடக்கும் சம்பவங்களையும், இனி நீங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துவதும் அவசியம்.
ஏதேனும் ஒரு விஷயத்துக்காக பயப்படுபவராக இருந்தால், அவர் அடிக்கடி தனது ஆழ் மனதுடன் பேசி, தன்னை தைரியசாலியாக மாற்றிக் கொள்ள முடியும். அதே போல, நல்ல சிந்தனைகளுடன் இருக்கும் ஆழ்மனதையும், பேசிபேசியே பாழாக்கவும் முடியும் என்கிறது அறிவியல். (இதனை மூளைச் சலவை என்று ஆங்கில மொழியாக்கத்தில் கூறலாம்)
தோல்வியடையும் போது, அழுது ஊரையேக் கூட்டுவதை விடவும், தன்னந்தனியே அமர்ந்து, தோல்விக்கான காரணத்தை ஆழ் மனம் உணர நேரம் கொடுத்து, அதனை சரி செய்வதற்கான ஆலோசனைகளை ஆழ்மனதுக்கு எடுத்துரைத்து, தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற ஆழ்மனதுக்கு சிறிது நேரம் ஒதுக்கினால் விரைவில் ஒருவரால் அந்த தோல்வியில் இருந்து விடுபட முடியும்.
ஆனால், ஆழ் மனதுக்கு ஆறுதல் தேடாமல், அனைவரிடமும் ஒரு விஷயத்தைச் சொல்லி சொல்லி என்னதான் ஆறுதல் தேட முற்பட்டாலும் அது ஆறுதலை ஏற்படுத்தாது.
மேலும், ஆழ்மனதுடன் நேர்மறையான பேச்சுவார்தை நடத்துவது எதிர்மறை எண்ணங்கள் உருவாவதை நிச்சயம் தவிர்க்கும், தடுக்கும்.
எனவே ஆழ்மனதுடன் அவ்வப்போது பேசி, அதனை உற்சாகமாகவும், தன்னம்பிக்கையோடும் இருக்க வழி ஏற்படுத்துங்கள். மற்றவர்களையும் பின்பற்றச் செய்து, உங்களது உற்சாகத்துக்கு இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.