பொதுவாக விசேஷங்கள் என்றால் பலரும் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஷியல் செய்துகொள்வது வழக்கம்.
ஆனால், வீட்டிலேயே வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு பொருள்களை தேர்வுசெய்துகொள்ள வேண்டும்.
சருமத்தை புத்துணர்ச்சியுடன் இளமையாக வைத்துக்கொள்ள கேரட்டிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. தினமும் ஒரு கேரட் ஜூஸ் குடித்துவர முகம் பொலிவடைவதை நீங்கள் உணர முடியும்.
அழகு நிலையங்களில் ப்ரூட் பேஷியல், ஆர்கானிக் பேஷியல் என்பது இயற்கையான பேஷியல் என்று சொல்லப்பட்டாலும் அதில் கெமிக்கல் இருக்கத்தான் செய்யும். பேஷியல் செய்த சில நாள்கள் முகம் பொலிவுடன் இருக்கும். மீண்டும் சிலருக்கு கருமடைய ஆரம்பிக்கும்.
ஆனால், வீட்டில் ரசாயனம் ஏதுமின்றி இயற்கையான பொருள்களை பயன்படுத்தும்போது பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கேரட்டை பயன்படுத்தி எவ்வாறு பேஷியல் செய்வது என்று பார்க்கலாம்..
கேரட் பேஷியல்
முதலில் ஒரு கேரட்டை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கியோ அல்லது துருவிய பின்னரோ மிக்சியில் போட்டு அரைத்து சாறினை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது சிறிது கேரட் சாறுடன் பால் சேர்த்து கலந்து அந்த கலவையை ஒரு பஞ்சால் நனைத்து முகத்தில் தடவுங்கள். 2 அல்லது 3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும். ஒரு 5 நிமிடம் காயவிட்டு பின்னர் முகத்தைக் கழுவுங்கள்.
அடுத்ததாக, கடலைமாவு, சிறிதளவு மஞ்சள் தூள், கேரட் சாறு, தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இப்போது 15 அல்லது 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிவிடுங்கள்.
முன்னதாக, இதே கலவையை வைத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதி முழுவதும் ஸ்க்ரப் செய்யலாம்.
இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்துவர முகம் பளபளப்பாக மாறும்.
இதையும் படிக்க | சருமத்தில் எண்ணெய்ப் பசை நீங்க.. இயற்கையான 'ஃபேஸ் பேக்'