சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு ‘தம்பிட்டு’ ரெசிப்பி!
By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published On : 04th March 2019 05:02 PM | Last Updated : 04th March 2019 05:02 PM | அ+அ அ- |

நம்மூரில் சுண்டல் செய்து படைத்து விட்டுச் சாப்பிடுவோமில்லையா சிவராத்திரிக்கு. அதைப்போல கர்நாடகாவில் சிவராத்திரிக்கு ‘தம்பிட்டு’ என்றொரு இனிப்பு செய்து சிவனுக்குப் படைக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கப்
பொரிகடலை: 1/4 கப்
ஏலக்காய்: 4
வெல்லம்: 1/2 கப்
வெள்ளை எள்: 1 டேபிள் ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை: 1/4 கப்
உலர்ந்த தேங்காய்த் துருவல்: 2 டேபிள் ஸ்பூன்
பொரிகடலை :தனியாக 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் :1/4 கப்
செய்முறை:
முதலில் அரிசியை வாணலியில் இட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வெள்ளை எள்ளையும் அதே வாணலியில் இட்டு எள் வெடிக்கும் பக்குவத்தில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். எள், வறுத்த நிலக்கடலை, 1 டேபிள் ஸ்பூன் பொரிகடலை உலர்ந்த தேங்காய் துருவல் அனைத்தையும் ஒரு பெளலில் கொட்டி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி மற்றும் 1/4 கப் பொரிகடலையை மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்து எடுத்து ஒரு சல்லடையில் சலித்து மேற்கண்ட கலவையுடன் சேர்த்து கலக்கவும். இதைச் செய்யும் போதே மீண்டும் அடுப்பை ஏற்றி கால் கப் தண்ணீர் விட்டு 1/2 கப் வெல்லம் சேர்த்து வெல்லம் கரைந்து நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இறக்கிய பின் வெல்லப்பாகு சூடு ஆறும் முன்பாக கை பொறுக்கும் சூட்டிலேயே மேலே அரைத்துக் களைந்து வைத்துள்ள மாவு பிளஸ் வெள்ளை எள், வறுகடலை, தேங்காய் துறுவல் மிக்ஸுடன் நன்கு கலந்து உருண்டை பிடித்து வைக்கவும். கிட்டத்தட்ட ரவா லட்டு பதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின் அனைவருக்கும் பரிமாறலாம். சூடாக இருக்கும் போது குழந்தைகளுக்குத் தரவேண்டியதில்லை.
கர்நாடக சிவராத்திரி ஸ்பெஷலான இந்த தம்பிட்டுவில் அரிசியோடு, எள், வறுகடலை, பொரிகடலை, தேங்காய், வெல்லம் எல்லாம் சேர்ப்பதால் சத்தான தின்பண்டம் என்பதில் சந்தேகமில்லை!