துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பகல் தூக்கம் நல்லதா கெட்டதா? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

பகலில் தூங்கினால்  உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரது கருத்து. ஆனால் அது தவறு.  

News image
Updated On :16 செப்டம்பர் 2018, 6:11 am

DIN

பகலில் தூங்கினால்  உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரது கருத்து. ஆனால் அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புதிய ஆய்வுகள்.

பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் பொது, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாக ஒய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறு சுறுப்பாகி விடுகின்றன. இப்படிப் போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டை  அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல் பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து, பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.

அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பல முறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவு தான் வந்தது.

Story image

மேலும் பகல் நேரத்தில் தூங்குவது, இதயத்திற்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாரா கன்குளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 89 மாணவர்களிடம் மேற்கொண்ட  ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் படியும், மற்றொரு பகுதியினரை, பகலில் தூங்காமல் இருக்கும் படியும் இருக்கச் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பகலில் தூங்குவதன் மூலம் இதய நோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பதும்  தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதை  விட்டு  அரை மணி நேர தூக்கம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் என்பது தான் அந்த எச்சரிக்கை. எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.