/

நாட்டு நலப்பணித்திட்டப் பொன்விழா மற்றும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா!

ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:12 am

DIN

நாட்டு நலப்பணித்திட்டப் பொன்விழா மற்றும் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழா பள்ளிக்கரணை, ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகச் சென்னைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோ. பாஸ்கரன் மற்றும் தமிழ்நாடு அரசின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் எம்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

Story image

பேராசிரியர் கோ. பாஸ்கரன் அவர்கள் பேசும்போது, 37 பல்கலைக்கழகங்களில் 40 ஆயிரம் மாணவர்களைக் கொண்டு 1969-இல் உருவாக்கப்பட்ட நாட்டுநலப் பணித்திட்டம் இன்று 600 பல்கலைக்கழகங்களில் 42 லட்சம் மாணவர்களைக் கொண்டு சேவையாற்றி வருகிறது. மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்கும் வாழ்வதற்கும் கற்றுத் தருகிறது. இந்தியாவில் ரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. இதற்கு நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகத் திகழ்கின்றது என்று பேசினார். பேராசிரியர் எம். செந்தில்குமார் அவர்கள் பேசும்போது, இந்தியாவில் நாட்டுநலப் பணித்திட்டத்தில் தமிழக மாணவர்கள் சேவை ஆற்றுவதில் முன்னோடியாகத் திகழ்கின்றனர். 

Story image

1988-ஆம் ஆண்டு முதல் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இந்தியா முழுவதும் மரக்கன்றுகளை நட்டு இயற்கையைப் பாதுகாப்பதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் பங்கு மகத்தானதாக இருந்து கொண்டு வருகிறது என்று சிறப்புரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்டப் பொன்விழா மற்றும் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை நினைவு கூறும் வகையில் பிற கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்விற்கு ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மை பிரிவு இயக்குநர் முனைவர் T.S. சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைமுதல்வர் கோ.ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பொன். ரமேஷ்குமார் அவர்கள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.