அன்லிமிடட் ஸ்னாக்ஸ், இண்ட்டர்வெல் புஃபே லஞ்ச், டின்னர் ஃப்ரீ... இப்படி ஒரு தியேட்டர் கம் ஷாப்பிங் மால் சாத்தியமா?

என்னுடைய தியேட்டருக்கு படம் பார்க்க 10 கிமீ தொலைவில் இருந்து வரக்கூடிய ரசிகர்களுக்கு இலவச வாகன வசதி செய்து தரவிருக்கிறோம்.
அன்லிமிடட் ஸ்னாக்ஸ், இண்ட்டர்வெல் புஃபே லஞ்ச், டின்னர் ஃப்ரீ... இப்படி ஒரு தியேட்டர் கம் ஷாப்பிங் மால் சாத்தியமா?

சென்னையின் பிரதான ஷாப்பிங் மால்களில் ஒன்று அபிராமி மெகா மால். அது இந்த மாதம் முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்தியை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால், மூடப்படுவதற்கான காரணம் தெரியுமா? அபிராமி ராமநாதன் அவர்களின் சமீபத்தியெ நேர்காணல் ஒன்றில் அதற்கான பதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டால் தியேட்டர் சென்று சினிமா பார்க்கும் சினிமா ப்ரியர்களுக்கு நிச்சயம் சர்ப்பிரைஸாக இருக்கும்.

இதேதடா இதுவரை தமிழ்நாட்டில் வழக்கத்திலேயே இல்லாத விஷயமாக இருக்கிறதே என்று தான் நீங்களும் சொல்வீர்கள்.

வாழ்க்கையில் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையுமே காலத்துக்கு தகுந்தாற்போல மாற்றியே தீர வேண்டும் என்ற கொள்கை கொண்டவராம் அபிராமி ராமநாதன். அப்போது தான் புதிது புதிதாக மக்களை ஈர்க்க முடியும் என்கிறார் அவர். சென்னையின் முதல் மெகா மால் கம் சினிமா தியேட்டர் கொண்டு வந்தவர்களில் இவர் முன்னோடி. தற்போது சென்னையில் மூலைக்கு மூலை மால்கள் நிரம்பி வழியத் தொடங்கி விட்டன. கோயம்பேட்டில் வீ ஆர் மால், அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக் மால், வடபழனியில் விஜயா ஃபோரம் மால், வேளச்சேரியில் ஃபோனிக் சிட்டி மால், அப்புறம் இருக்கவே இருக்கிறது மாயாஜால், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஐநாக்ஸ் இத்யாதி, இத்யாதி... இவற்றில் ஆரம்பகாலத்தில் துவக்கப்பட்ட அபிராமி மால் மற்றெல்லாவற்றையும் விட பழசாகி விட்டதால் அதை இடித்து விட்டு புத்தம் புது நவீன உத்திகளுடன் புதிய மால் ஒன்றை அங்கே நிர்மாணிக்கவிருக்கிறாராம் அபிராமி ராமநாதன். இந்தப் புதிய மால் இன்றைக்கு சென்னையில் துவக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மால்கள் அத்தனையையும் விட புதிய தொழில்நுட்பங்கள் பல புகுத்தப்பட்டு முற்றிலும் சினிமா மற்றும் ஷாப்பிங் ரசிகர்களின் ரசனைக்கும், செளகரியத்துக்கும் தீனி போடும் வகையில் கட்டுமானம் செய்யப்படவிருக்கிறதாம்.

அதன் ஸ்பெஷாலிட்டி குறித்து அபிராமி ராமநாதன் அவர்கள் தெரிவித்ததைக் கேளுங்கள்;

என்னுடைய புதிய மெகாமாலில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புரஜெக்டர் இல்லாமல் சினிமா காண்பிக்கவிருக்கிறோம். சர்வரில் இருந்து அப்படியே நேரடியாக திரையில் ஒளிபரப்பாகும் வகையில் இருக்கும் என்பதால் இதன் துல்லியத்தன்மை குறித்து கேள்வியே தேவைப்படாது. அது மட்டுமல்ல 100 பேர் உட்கார்ந்துபார்க்கும் விதத்தில் இருக்க வேண்டிய தியேட்டரில் வெறும் 60 இருக்கைகள் மட்டுமே கொண்டு சினிமா பார்க்க வருபவர்கள் படுத்துக் கொண்டு பார்க்கும் வகையில் நவீன வசதிகள் செய்யப்படவிருக்கின்றன.

அது மட்டுமல்ல, இப்போது நாங்கள் கட்டவிரும்மும் தியேட்டர்களில் மேலே சீலிங்கில் லைட்டிங் இருந்தாலும் அந்த வெளிச்சம் திரையையும் ரசிகர்களின் பார்வையையும் உறுத்தாத அளவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறோம்.

என்னுடைய தியேட்டருக்கு படம் பார்க்க 10 கிமீ தொலைவில் இருந்து வரக்கூடிய ரசிகர்களுக்கு இலவச வாகன வசதி செய்து தரவிருக்கிறோம்.

அப்படியே எவரேனும் சொந்த வாகனங்களில் வருவது தான் வசதி என நினைத்தாலும் தடையில்லை. அவர்களுக்கெல்லாம் பார்க்கிங் சார்ஜ் இலவசம்.

தியேட்டரில் இடைவேளையின் போது காஃபி, டீ, கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் அன்லிமிடட். யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் அருந்திக் கொள்ளலாம்.

அது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதன்முறையாக இடைவேளையின் போது இலவச புஃபே லஞ்ச் & டின்னர் முறையை நான் எனது மாலில் அறிமுகப்படுத்தப் போகிறேன். சினிமா பார்க்க வருபவர்களின் டென்சனைக் குறைத்து அவர்களை நிம்மதியாக படம் பார்க்கச் செய்யும் உத்தி இது.

புதிதாக கட்டவிருக்கும் இந்த மெகாமாலில் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா? ரெசிடென்ஸியல் காம்ப்ளக்ஸ் வீடுகள். அவற்றையும் தியேட்டர் வளாகத்துக்குள்ளேயே நிர்மாணிக்கிறோம். இவையெல்லாம் தான் புதிதாகக் கட்டப்பட உள்ள தியேட்டரின் சர்ப்பரைஸ் ரகசியங்கள். இதை வெளியில் சொல்வதால் எனக்கொன்றும் பிரச்னை இல்லை. என்னைப் பார்த்து யாராவது இந்த மெத்தடைக் காப்பி அடிக்க நினைத்தால் கூட அது அவர்களால் முடியாது. காரணம் என்னைப்போல வேறு யாராலும் இத்தனை பெரிய புராஜெக்ட்டை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கவே முடியாது. இப்போதுள்ள அபிராமி மெகா மாலை 18 மாதங்களுக்குல் கட்டி முடிப்பேன் என்று அறிவித்து விட்டு பணியைத் தொடங்கி சொன்னது போல முடித்துக் காட்டினேன். அதே போல இந்தப் புதிய மாலையும் கட்டி முடிப்பேன் என்கிறார்.

இத்தனை மாற்றங்களுக்கும் காரணமாக அவர் சொல்லும் ஒரே விஷயம் தொழில் போட்டி ஒன்றே. ஆம், சென்னையில் புதிது, புதிதாக மால்கள் தோன்றிக் கொண்டே இருப்பதால் இந்த மெகாமால் நிர்மாணிப்பதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதால் இந்தப் புதுமைகளை எல்லாம் வைத்து இதுவரை இந்தியாவிலேயே இல்லாத விதமான அனேக செளகரியங்களுடன் தனது புதிய மாலைத் திறக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது முயற்சி கைகூடினால் அவர் சந்தோசப் படுகிறாரோ இல்லையோ இத்தனை செளகரியங்களுடன் திரைப்படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்வார்கள் என்பது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com