வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு ஒரு அறிவிப்பு, அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது: ரூ 1 லட்சம் பரிசுத் தொகை!
By DIN | Published On : 17th July 2019 11:00 AM | Last Updated : 17th July 2019 11:00 AM | அ+அ அ- |

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் வழங்கப்படும் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு' விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கான ஆய்வுக் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம் என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வழங்கப்படும்.
விருதாளர் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது மாநிலம் தழுவிய விருது என்பதால், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்.
விருதாளரைத் தேர்வு செய்வதற்காக 5 அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விருது பாராட்டு கேடயத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும். விருதுத் தொகையை சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான தங்களது 10 மிகச்சிறந்த கட்டுரைகளின் தலைப்புகளையும் வெளியான இதழ்கள் மற்றும் தேதிகளையும் அனுப்பி வைக்க வேண்டும். எந்தக் கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும்.
ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விருது வழங்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க மேடையில் நடைபெறும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.குழந்தைவேல் விருது வழங்கவுள்ளார். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் விவரங்களுக்கு:
மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ- 47, சம்பத் நகர், ஈரோடு 638011;
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி/ அலைபேசி எண்கள் 0424-2269186, 94891 23860,
விவரங்களை இணையதளத்தில் பெற...