பி.எம்.டபிள்யூ மற்றும் ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களின் ஓட்டுநர்கள் பாதசாரிகளுக்காக கார்களை நிறுத்துவது மிகவும் குறைவு என்று கூறுகிறது ஓர் ஆய்வு.
லாஸ் வேகாஸின் நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் போக்குவரத்து மற்றும் சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான வாகனங்களை வைத்திருப்பவர்கள் ஆர்வ மிகுதியில் வெளியில் நடப்பதை கொண்டுகொள்ளாமல் வாகனத்தை இயக்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்த 461 கார்களில், 28 சதவீதத்தினர் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கு கார்களை நிறுத்துகின்றனர்.
பாதுகாப்பு என்று வரும்போது பாதசாரிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். கார் ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேலாக வாகனத்தை செலுத்தக்கூடாது. ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த அடிப்படைக் கல்வி அவசியம் என்று வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பாதசாரிகள் சாலையை கடக்கும்போது ஏற்படும் ஆபத்து சராசரியாக மணிக்கு 16 மைல் வேகத்திற்கு 10 சதவீதம் என்றும், 23 மைல் வேகத்திற்கு 25 சதவீதம் ஆபத்து என்றும், அதேபோன்று 31 மைல் வேகத்திற்கு 50%, 39 மைல் வேகத்திற்கு 75%, 46 மைல் வேகத்திற்கு 90% ஆபத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, பாதசாரிகளை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து சரியான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவ வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.