முடி உதிர்தலைத் தடுக்க நாம் பல்வேறு முறைகளை மேற்கொண்டாலும், முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கும் முடி பராமரிப்பின்மை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தலைமுடியை பராமரிக்கும் முறை தெரியாமல்தான் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.
தலைமுடி பராமரிப்பில் செய்யக்கூடாதவை
► தலைக்கு குளித்தவுடன் தலையை துண்டால் இறுக்கக் கட்டக்கூடாது. சுத்தமான இலகுவான காட்டன் துணியை பயன்படுத்துவது நல்லது. தலைமுடிக்கு அழுத்தம் கொடுக்காமல் மிகவும் சாதாரணமாக உலர்த்த வேண்டும்.
► தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பால் தலை வாரக்கூடாது. நன்கு உலர்த்திய பின்னரே தலைமுடியை சீவ வேண்டும்.
► சீப்புகளில் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தாமல் மரத்தால் ஆன சீப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இதனால் முடி வெப்பமடைந்து உதிர்வது தடுக்கப்படும்.
► தலைமுடியில் சிக்கல் இருந்தால் அதனை அவ்வப்போது வாரிவிடுவது நல்லது. சிக்கலை வைத்துகொண்டே இருந்தால் மிகப்பெரிய முடி உதிர்வுக்கு அது வழிவகுக்கும்.
► தலையில் எண்ணெய் பதம் இருப்பது அவசியம். காலையில் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாதவர்கள் இரவில் வைத்துவிட்டு காலையில் தலைக்கு குளித்துவிட்டுச் செல்லலாம்.
► முடிந்தவரை 'ப்ரீ ஹேர்' விடுவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறான சூழ்நிலைகளில் மாசு அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்க்கலாம்.
► இரவில் படுக்கப்போகும் முன் தலைமுடியின் மேலிருந்து கீழ் வரை சீவி பின்னி விட்டு படுத்தல் நன்று. இதனால் சுருள் முடி கூட சிறிது நேராக வாய்ப்புண்டு.
► தலையணையை அழுக்கின்றி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.