தற்போதைய காலகட்டத்தில் சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிகம்பேர் இருக்கின்றனர். எந்த ஒரு தட்பவெப்பநிலையாக இருந்தாலும் பிரிட்ஜில் இருந்து 'ஜில்' என இருக்கும் தண்ணீரை அப்படியே அருந்துகின்றனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி, செரிமானத்தை தடுக்கும். உணவு வயிற்றிலேயே தங்குவதால் சிலருக்கு செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகள்கூட ஏற்படலாம். மேலும், உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
அதேநேரத்தில் சூடான/வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. எனவே, உணவிற்குப்பின் சில நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
இதனால் உணவு எளிதாக செரிமானம் அடையும். அசைவ உணவுகள், திட உணவுகள் அதிகம் சாப்பிட்டிருந்தாலும் செரிமானப் பிரச்னை ஏற்படாது.
பொதுவாகவே நாள் முழுவதும் சுடுதண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறைவதோடு உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தொண்டை மற்றும் உணவுப் பாதையில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றும். நரம்பு மண்டலத்தை சுத்திகரிக்கும்.
சூடான நீரை குடிக்க முடியாதவர்கள் காய்ச்சிய நீரை பருகலாம். சூடான/ காய்ச்சிய நீரை பருகுவதால் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் சூடான தண்ணீரை குடிப்பதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். இது உடல் எடையை குறைக்க உதவும். வயதான தோற்றத்தைத் தவிர்க்கும். மேலும் முகம் பொலிவு பெறும்.