காபி குடிப்பதால் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுமா? - ஆய்வு சொல்வது என்ன?

காபி குடிப்பது கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்துமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காபி குடிப்பது கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உலகம் முழுவதும் காபிக்கு எனத் தனிப் பிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இடமாக தேடிப்பிடித்து காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம். டீயும் காபியும் மனித வாழ்வின் சந்தோஷத்திலும் துக்கத்திலும் முக்கியமானது என்றுகூட சொல்லலாம். 

இந்நிலையில், காபி குடிப்பது கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்துமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், காபி குடிப்பது கர்ப்பப்பை அல்லது கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

'Journal of Obstetrics and Gynaecology Research' என்ற மகப்பேறு மருத்துவ ஆராய்ச்சி இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

6,99,234 பேர் பங்கேற்ற ஆய்வில், 9,833 பேர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதாவது, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்களில், காபி நுகர்வு, பெருமளவில் பாதிப்பைக் குறைத்துள்ளது. 

இதுபோன்று, முன்னதாக ஈரானில் உள்ள தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கும் காபி குடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட காபி குடிப்பது ஒரு காரணமாக இருக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்காவிட்டாலும் காபியால் பாதிப்பு இல்லை என்பது இதன்மூலம் விளங்குகிறது. 

கர்ப்பப்பை புற்றுநோய்

சர்வதேச அளவில் ஏற்படும் புற்றுநோய்களில் 15 ஆவது இடத்திலும், பெண்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாகவும் இருக்கிறது. 

கருப்பையின் கீழ்ப்பகுதியை தாக்கும் இந்த புற்றுநோய் பூப்படைந்த கருவுறும் தகுதியுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. 

கருப்பை வாயில் உதிரப்போக்கு, மாதவிடாய் இயல்பின்றி அதிக ரத்தல் போதல், தீராத புண், குரலில் மாற்றம், சளி, மலம் உள்ளிட்டவற்றில் ரத்தம் கலந்து வெளியேறுதல், திடீர் எடை குறைவு, கருப்பை பகுதியில் வலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறனர். 

ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் குணமாக்கவும் முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் வயிறு, இடுப்புப் பகுதியில் உள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com