ஆப்பிள்- ஓபன்ஏஐ உடன்பாடு: யாருக்கெல்லாம் பாதிப்பு?
முன்னணி தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிளும் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 18-ல் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு ஜூன் 10-ம் தேதி நடக்கும் ஆப்பிளின் தொழில்நுட்ப உருவாக்குநர்கள் மாநாட்டில் வெளியிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்துக்கு போட்டி நிறுவனங்கள் மட்டுமின்றி ஆப்பிள், சாட்ஜிபிடி நிறுவனங்களுக்குள்ளேயே எதிர்ப்பு எழும் சாத்தியங்கள் உள்ளன.
இந்த உடன்பாட்டின் பேரில் ஆப்பிள் பொறியாளர்கள் சாட்ஜிபிடியை ஆப்பிளின் செய்யறிவு உதவியாளரான சிரியுடன் இணைக்க பணியாற்ற வேண்டியிருக்கும். இந்த செயல்பாடு சிரியை இன்னும் திறன் வாய்ந்ததாகவும் மனிதர்கள் போல நடந்து கொள்ளவும் செய்யும்.
இந்த உடன்பாட்டில் விமர்சனம் எழக்கூடிய மற்றொரு நிறுவனம் மைக்ரோசாஃப்ட்.
சாட்ஜிபிடியின் வளர்ச்சியில் பெருமளவில் பங்கு கொண்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் தனது தரவு மையங்களை சாட்ஜிபிடிக்கு வழங்கியுள்ளது. அதற்கு மாற்றாக சாட்ஜிபிடி சேவைகளை பெற்றுகொள்கிறது.
ஆப்பிள் சாட்ஜிபிடியுடன் இணைந்தால் மைக்ரோசாஃப்டின் தரவு மையங்களை லட்சக்கணக்கான ஆப்பிள் பயனர்கள் பயன்படுத்தத் தொடங்குவது அதிகப்படியான சுமையாக அமையும்.
இதற்காக 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஓபன்ஏஐயின் எதிர்கால இலாபத்தில் மைக்ரோசாஃப்ட் பங்குக் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிளுக்கும் சாட்ஜிபிடிக்குமான பண மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து தகவல்கள் இல்லை.
பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஆப்பிளும் பயனர்களின் தரவுகள் வழியாக செய்யறிவு திறனை மேம்படுத்தும் சாட்ஜிபிடியும் விவகாரமான பொருத்தம் என தொழில்நுட்ப ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
இந்த நடைமுறைகள் எவ்வாறு வரவுள்ளன என்பது குறித்து அறிய ஆப்பிள் பயனர்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ஆர்வலர்களும் ஆவலாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.