எங்கள் குலதெய்வம் ’நாட்டுக்கல் அங்காள பரமேஸ்வரி’ வாசகர் குலதெய்வக் கதை - 6!

ஒரு சமயம் அவர்கள் குடும்பத்தின் பெண்கள் நீர் கொண்டு வர குடகனாற்றுக்கு சென்ற போது குறத்தி மீனின் வடிவிலே அவர்கள் குடத்திலே குபு குபு என்று வந்து புகுந்து கொண்டாள் அந்த அங்காளியானவள்.
எங்கள் குலதெய்வம் ’நாட்டுக்கல் அங்காள பரமேஸ்வரி’ வாசகர் குலதெய்வக் கதை - 6!

‘தமிழகத்தில் பலருக்கு அங்காளபரமேஸ்வரி குலதெய்வமாக விளங்குகிறாள். அவ்வன்னையின் ஆதி பீடம் மேல்மலையனூர். அந்த அங்காளி எங்கள் குலதெய்வமாக வந்த வரலாற்றை இக்கட்டுரையில் காணலாம். அம்மனுக்கு சிவராத்திரி நாள் உகந்த நாள் சிவராத்திரியின் மகிமையும் இடம் பெறுகின்றது. 

முன்னைப் பழம் பொருளுக்கும் முன்னைப் பழம் பொருளும், பின்னை புதுமைக்கும் பேற்றும் பெற்றியனான, ஆதியும் அந்தமும் இல்லாத சிவப்பரம் பொருளுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் மிகவும் முக்கியமானது மஹா சிவராத்திரி விரதம் ஆகும். மாசி மாதம் வரும் கிருக்ஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று மஹா சிவராத்திரி நமது பாரத தேசமெங்கும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. நதிகளிலே எவ்வாறு பாகீரதியும், மரங்களிலே கற்பக தருவும், பசுக்களிலே காமதேனுவும், யானைகளிலே ஐராவதமும், கடல்களிலே பாற்கடலும், பர்வதங்களிலே கைலாயமும் சிறந்ததோ அது போல விரதங்களிலே சிறந்தது மஹா சிவராத்திரி விரதம். இந்த இரவின் சிறப்புக்கள் தான் எத்தனை எத்தனை. எம்பெருமானின் அடியையும் முடியையும் காண மாலும் அயனும் தேடிச்  சென்ற போது அனலுருவாய் சோதிப் பேரொழிப்பிழம்பாய், லிங்கோத்பவராய் தோன்றிய இராத்திரி  மஹா சிவராத்திரி. இதையே ஸ்கந்த புராணத்தில்  

"அரியும் யரணும் முன் தேடும் அவ்வனற்கிரி அலை
கிரி எனும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
இரவதே சிவராத்திரி ஆயினது இறைவர்
பரவி உய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும்
என்று கூறப்பட்டுள்ளது."

பிரளய காலத்தின் முடிவில் சகல உயிர்களும் சிவபெருமானிடம் ஒடுங்க, அம்மை கருணையினால் உயிர்களுக்கு இரங்கி தவம் இருந்த இராத்திரியே சிவராத்திரி. அம்மை விளையாட்டாக  சூரிய சந்திரர்களான ஐயனின்  இரு கண்களை  பொத்த  உலகம் முழுவதும் இருண்டது, அறம் வழுவின, அதற்கான பரிகாரமாக, ஆகமவிதிப்படி அம்மை சிவ பூஜை செய்த நான்கு யாமமே சிவராத்திரி. 

தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள், அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள், கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள், பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள் இந்நாளே என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன. இறைவன் மாதொருபாகனல்லவா எனவே அவருக்குரிய சிவராத்திரி அம்மைக்கும் உரியதன்றோ? ஆம் உரியது. ஆங்காரம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது சிரத்தை ஐயன் கொய்த போது அந்த பிரம்ம கபாலம் ஐயனின் கைகளில் ஒட்டிக் கொண்டு அவர் பிச்சைத்தேவராக  அலைந்தார். கணவன் நிலை கண்டு மனம் நொந்த அம்மை அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் வாங்கி பித்தாகி அலைந்த ரூபமே அங்காள பரமேஸ்வரி ரூபம். 

இவ்வாறு அலைந்த அம்மை  பின் இதே மஹா சிவராத்திரி நன்னாளில் பின் மயானத்தில்  அண்ணன் திருமாலின்  ஆலோசனைப்படி சோறு இறைத்து பிரம்ம கபாலம் நீங்கப்  பெற்று மேல்மலையனூரில் நாம் உய்ய கோவில் கொண்டதால், அங்காள பரமேஸ்வரிக்கும் உரிய நாள் மஹா சிவராத்திரியாகும். எனவே தான் மஹா சிவராத்திரியன்று எல்லா அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும்  சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. எனவே அம்மைக்குரிய அந்த  சிவராத்திரியின் போது மேல் மலையனூரிலிருந்து  குடகனாற்றிலே  குறத்தி மீனாக குடத்திலே வந்து நாட்டுக்கல் பாளையம் என்ற ஊரிலே  கோவில் கொண்ட, தானே  வந்தெம்மை  ஆட்கொண்ட அற்புத வரலாற்றைக் காண தங்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்  வாருங்கள் அடியேனுடன்.  
  
ஒரு சமயம் எங்கள் குல வணிக மக்கள் சிலர் சதங்கைகள் ஒலிக்கும் மாடுகள் பூட்டிய வண்டிகளில்,  மஞ்சள், மிளகு,  மற்றும் மயில் தோகை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சோதித்து அருள  கருணைக் கடலாம் அந்த அகிலாண்ட நாயகி, உலக மாதவாய், ஏக நாயகியாய், உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும்  அன்னை ‘ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி’ சுருக்கம் விழுந்த தோலுடன் தலை நரைத்த கிழவியாய் கையில் கோலூன்றி  அவர்களிடம் வந்து... ‘மக்களே வண்டியிலே என்ன கொண்டு செல்கிறீர்கள்?’ என வினவ; அவர்களோ உண்மையைக் கூறாமல் ‘நாங்கள் தவிடும், புண்ணாக்கும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம் தாயே’ என்றனர். அனைத்தையும் அறிந்த அன்னை சிரித்து அப்படியே ஆகட்டும் என்று சென்று விட்டாள். 

வணிகர்கள் சந்தை சென்று வண்டிகளைப் பிரித்துப் பார்த்த போது, பொருட்கள் அனைத்தும் தவிடும் புண்ணாக்குமாக இருக்கக் கண்டு  மன்னிப்புக் கேட்க; அம்மையும் தான் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி என்றும் தன்னை குல  தெய்வமாக   கொண்டு வழிபட்டு வரவும் நான் உங்கள் குடி உயர செய்வேன் என்றும்  கூறினாள். அது முதல் அவர்களும் அங்காள பரமேஸ்வரியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வந்தனர். 

அவ்வாறு இருந்து வரும் நாளில்...  ஒரு சமயம் அவர்கள் குடும்பத்தின் பெண்கள் நீர் கொண்டு வர குடகனாற்றுக்கு சென்ற போது குறத்தி மீனின் வடிவிலே அவர்கள் குடத்திலே குபு குபு என்று வந்து புகுந்து கொண்டாள் அந்த அங்காளியானவள்.  அந்தப் கன்னிப் பெண்களும் அந்த குடத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்து வீடு சேர்ந்த பிறகு அம்மை  மீன் வடிவத்தில் அவர்களுக்கு தெய்வமாய்  தானே வந்திருப்பதாக கூறினாள். அவர்கள் பாலும் தேனும் பகிர்ந்தளிக்க அந்த ரூபத்திலேயே  குடத்தோடு வந்த தாய் குலத்தோடு  தங்கி விட்டாள். திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் அவர்கள் ஒரு வெள்ளிப் பேழையிலே அம்மையை எழப் பண்ணி தங்களுடன் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தாயையும் கொண்டு சென்று வெள்ளிக் கிழமைகளில் அத்தாய்க்கு பூஜை செய்து வந்தனர். 
 
ஒரு சமயம், அவர்கள் புளியம்பட்டியில் ஒரு ஒலைக் குடிசையில் அம்மையை வைத்து  வணங்கி வரும் போது  அம்மன் தான் நிலையாக குடிகொள்ள வேண்டி ஒரு நாடகம் ஆடினாள். அந்த ஓலைக் குடிசையில் பற்றியது அக்னி. ஆனால் அக்னி ஜூவாலையையே மகுடமாக அணிந்த அந்த மகேஸ்வரியை எந்த அக்னிதான் என்ன செய்துவிட முடியும். எரிந்தது ஓலைக் குடிசை மட்டுமே, ஆனால் அம்மை இருந்த பேழை மட்டும் அப்படியே இருந்தது. எனவே அவர்கள் அம்மனிடம், ‘தாயே எங்களுடன் நீயும் ஏன் அலைய வேண்டும்? உனக்கு நிலையான ஒரு கோவில் கட்ட ஒரு இடத்தை கூறு என்று மனமுருகி வேண்டி நிற்க, அந்தத் தாயும் கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் நாட்டுக்கல்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள ஜமீன்தாரின் வளர்ப்பு பிள்ளைக்கு தங்கள் பெண் ஒருத்தியை மணம் செய்து கொடுங்கள், பேழையுடன் என்னையும் சீதனமாக கொடுங்கள் நான் அங்கே கோவில் கொள்கிறேன் என்றாள். அவ்ர்களும் அவ்வாறே  அந்த ஜகன் மாதாவுக்கு கோவில் கட்டி சிறப்பாக இன்றும் வழிபட்டு வருகிறார்கள்...வருகிறோம்!

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மையைப் பேழையிலிருந்து எடுத்துப் பொன்னூஞ்சல் ஆட்டுகிறோம். அம்மைக்கு உகந்த மஹா சிவராத்திரியன்று அம்மை ஆற்றுக்கு எழுந்தருளி அருள் முகத்துடன் கோவிலுக்கு எழுந்தருளி மேல் மலையனூர், குடகனாறு தீர்த்தவாரி கண்டருளி பின் இரவில் பள்ளய பூஜை கண்டருளுகிறாள். மறுநாள் மாலையில் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தருளி உஞ்சல் உற்சவம் கண்டருளுகிறாள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com